இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என வாதிடவே இல்லை... தங்க தமிழ்ச்செல்வன்
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வாதிடவே இல்லை என்கிறார் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
டெல்லி: தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என வாதிடவே இல்லை என தினகரன் அணியின் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் விசாரணையின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை. ஏற்கனவே நிறைய பிரமாண பத்திரங்களை நாங்கள் தாக்கல் செய்தோம்.
தேர்தல் ஆணையமோ திடீரென்று மேலும் கூடுதல் பிரமாண பத்திரங்களை கேட்டது. ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் குழப்பங்கள் உள்ளன.
அதை கண்டுபிடிக்க எங்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. ஆகையால் உடனடியாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றுமட்டுமே வாதிட்டோம். அதற்காக இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என வாதிட்டதாக கூறுவது தவறு.
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.