வாட்ஸ் அப் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைத் திருமணம்... ஹைதராபாத்தில்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 15 வயது மாணவியின் திருமணம் ஒன்று வாட்ஸ் அப் உதவியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.
ஹைதராபாத் சரூர் நகரைச் சேர்ந்தவர் பி.விட்டல். இவரது 15 வயது மகள் கீதா. நடந்து முடிந்த 10ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி அடைந்த கீதாவுக்கு மேற்கொண்டு படிக்க ஆசை. ஆனால், அவரது தந்தையோ உறவினர் ஒருவருக்கும், கீதாவுக்கும் திருமணம் ஏற்பாடு செய்தார். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளா விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

நேற்று முன்தினம் சரூர் நகர் ஏ.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாத கீதா, தனது பிரச்சினைகளை கடிதமாக எழுதி அதை செல்போனில் புகைப்படமாக எடுத்து, வாட்ஸ்-ஆப்' மூலம் ஹைதராபாத் நகர போலீசாருக்கு சனிக்கிழமை இரவு 12 மணியளவில் அனுப்பி வைத்தார்.
வாட்ஸ் அப் மூலம் தகவல் அறிந்த எல்.பி. நகர் காவல் துறை துணை ஆணையர் வேணுகோபால், உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சரூர் நகர் போலீசாருக்கும், தாய்-சேய் நலத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட் டார். அதன்பேரில் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் திருமண மண்டபத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தாய்-சேய் நலத்துறை அதிகாரிகள், இரு வீட்டாரின் பெற்றோரிடமும் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.












Click it and Unblock the Notifications