அருண் ஜெட்லி சொல்வது மட்டும் நடந்துவிட்டால்.. மக்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா
Recommended Video

டெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில், அதை குறைப்பதற்கு, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இந்த விவகாரத்துக்கு நன்கு பரிச்சயமானவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் போதிலும், நமது நாட்டில், அதன் விலை அதிகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

முந்தைய அரசு
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது வரைவு ஜிஎஸ்டி மசோதாவில் பெட்ரோல், டீசலை அதன் வரம்புக்கு வெளியே வைத்தது. ஆனால் தற்போது நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறீர்கள்.

மாநில அரசுகள் ஏற்க வேண்டும்
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளின் ஆலோசனைக்குப்பிறகு முடிவு செய்யப்படும். கருத்தொற்றுமை ஏற்பட்டால்தான் இதை செய்ய முடியும்.

காங்கிரஸ் அரசு செய்யவில்லை
ஏற்கனவே மத்திய அரசின் ஆலோசனைப்படி பல்வேறு மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்துள்ளன. ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அதைச் செய்வதில்லை என்றார்.

தனி நீதிமன்றங்கள்
அரசியல் தலைவர்களை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றங்களை அமைக்கும் முடிவு குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜெட்லி, சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற வாக்கிற்கிணங்க, எம்.பி., எம்எல்ஏக்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றார் ஜெட்லி.












Click it and Unblock the Notifications