மேற்கு வங்கத்தில்.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது இதுக்குதான் தேர்தல் ஆணையம் விளக்கம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கூச் பிகார் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 4-ம் கட்ட வாக்குப்பதில் பல்வேறு இடங்களால் வன்முறை சம்பவங்கள் மூண்டன.
பதற்றம் மிகுந்த கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
மம்தா கோரிக்கை
உள்ளூர் மக்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின்(சி.ஐ.எஸ்.எஃப்) துப்பாக்கிகளை பறித்ததாகவும், இதனால் பாதுகாப்பு படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கூச் பிகார் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எஃப்) தான் நடத்தினார்கள் என்றும் இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக கூறினார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கூச் பிகார் வாக்குச்சாவடி அருகே மாணிக் எம்.டி என்ற சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். இரண்டு மூன்று உள்ளூர் பெண்கள் அவரை கவனித்துக் கொண்டிருந்தனர். வாக்குச்சாவடியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள் சிறுவனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
உள்ளூர் மக்கள் எதிர்ப்பு குரல்
அருகிலுள்ள உள்ளூர் போலீசாரின் வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்களா? என்றும் அவர்கள் உள்ளூர் மக்களிடம் கேட்டார்கள். அப்போது அங்கு இருந்த வேறு சில உள்ளூர் மக்கள் சிறுவனை சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் தாக்கியதாக நினைத்தார்கள், அத்தகைய தவறான புரிதலின் விளைவாக அங்கு இருந்த ஒரு சிலர் சிஐஎஸ்எஃப் படையினருக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பினார்.
படைகளை தாக்கினர்
இதனால் மேலும் 300-350 கிராமவாசிகள் ஒன்று சேர்ந்து சிஐஎஸ்எஃப் பணியாளர்களை கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள். இது தவிர அந்த கும்பல் வாக்குப்பதிவு அதிகாரிகளையும் தாக்க முயன்றது. இதனால் சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் மற்றும் சில உள்ளூர் போலீசார் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கூடுதல் விரைவுப் படையினர் அங்கு அனுப்பி வைகப்பட்டனர். ஆனால் கட்டுக்கடங்காத கும்பல் அவர்களின் வாகனத்தை தாக்கியது.
வழியில்லாமல் துப்பாக்கிச்சூடு
அந்த கும்பல் தொடர்ந்து வீர்ரகளையும் கொடூரமாக தாக்கியதால் வேறு வழியின்றி தங்கள் உயிரையும், தேர்தல் அதிகாரிகளையும், வாக்குபதிவு எந்திரங்களையும் காப்பாற்றசிஐஎஸ்எஃப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கும்பல் மறைந்து சென்றவுடன் சிஐஎஸ்எஃப் பணியாளர்கள், வீட்டுக் காவலர் மற்றும் வாக்குப்பதிவு அதிகாரிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணை நடத்தப்படும்
இந்த தொடர்பாக சிஐஎஸ்எஃப் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது, இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி அருகே நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய படைகளுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.