ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் துணை ராணுவ தாக்குதல்! விவசாய சங்கங்கள் சரமாரி புகார்
சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது முறையாக டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் பேரணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தங்களுடைய முகாம்கள் மீது துணை ராணுவமும், போலீசும் தாக்குதல் நடத்தியதாகவும், தற்போது 6 விவசாயிகளை காணவில்லை என்றும் விவாசய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுக்க மத்திய அரசு தரப்பில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக அறிவித்த விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடுவதில் உறுதியாக இருக்கின்றனர். மறுபுறம் காவல்துறையினர் தரப்பில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பல கட்ட தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர் கொண்டு சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
எனவே ஹரியானா-பஞ்சாப் எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கலைக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான மோதல் உக்கிரமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராகுல் காந்தியும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, மத்திய அரசு 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. எனவே, டெல்லி நோக்கிய பேரணியை இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க தலைவர்கள், தங்கள் முகாம்கள் மீது துணை ராணுவமும், காவல்துறையும் சரமாரியான தாக்குதல்களை நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக தங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகளை காணவில்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் ஷம்பு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம், மத்திய அரசை பின்வாங்க வைத்தது. போராட்டம் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்ப பெற்றது. தற்போது இதேபோன்ற சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக டெல்லி நோக்கி வரும் விவசாயிகளை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications