கார் விபத்து வழக்கில் சல்மான்கானின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மனு
மும்பை: நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கில் இருந்து நடிகர் சல்மான் கானை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு நேற்று மனுத் தாக்கல் செய்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு, இரவு நேரத்தில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த சல்மான் கான், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அவரை விடுதலை செய்தது.
இது நாடு முழுவதும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சல்மான் கானின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அரசுத் தரப்பு ஆதாரங்களை பயன்படுத்துவதில் மும்பை உயர்நீதிமன்றம் தவறியிருக்கிறது. விசாரணை நீதிமன்றம் சல்மான் கானுக்கு அளித்த தண்டனை சரியானது. அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications