கோவாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ்- பாஜக கடும் போட்டி- சிறிய கட்சிகளுக்கு 'மவுசு'!
கோவாவில் பாஜக, காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க இரு தேசியக் கட்சிகளும் அங்குள்ள சிறிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பனாஜி: கோவாவில் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால் புற வாசல் வழியாக ஆட்சி அமைக்க பாஜகவும், காங்கிரஸும் தமக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிய கட்சிகளிடம் பேரம் நடத்தி வருகின்றன.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏ-க்களின் ஆதரவும், பாஜகவுக்கு 9 எம்எல்ஏ-க்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. இதனால் தலா 3 இடங்களைப் பெற்ற கோவா முன்னணி கட்சி(ஜிஎஃப்பி) , மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி (எம்ஜிபி), சுயேட்சைகள் ஆகியோரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக தேசியக் கட்சிகள் முழு வீச்சில் பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கோவா முன்னணி கட்சி
கோவா முன்னணி கட்சியில் வெற்றி பெற்றுள்ள 3 பேருமே முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள். இந்த 3 பேரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருக்கிறது.

எம்ஜிபி
எம்ஜிபி கட்சியும் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அக்கட்சியும் காங்கிரஸ் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கு சுயேட்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவு உள்ளது.

சுயேட்சைகள்
வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்களில் ரோஹன் கான்டே காங்கிரஸுக்கும், கோவிந்த் காவ்டே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றொரு சுயேட்சையான பிரசாத் கோயங்கரின் முடிவு கோவாவில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

காங். வாய்ப்பு?
எம்ஜிபி கட்சியினரும், சுயேட்சைகளான கான்டே மற்றும் கோயங்கரும் பாஜகவை ஆதரித்தால் பாஜக ஆட்சி அமைக்கும். ஒரு வேளை எம்ஜிபியும், கோவா முன்னணி கட்சியும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தால் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
மதில் மேல் உள்ள பூனை எந்த பக்கம் சாயும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications