ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்
ஜெய்ப்பூர்: துபாயிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானம் ஒன்றின் டயர் வெடித்த நிலையிலும், பத்திரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நாட்டில் விமான சேவை வழங்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ் ஜெட். இந்நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு, இந்தியாவிலிருந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்.ஜி. 58 என்ற விமானமானது, துபாய் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரங்களுக்கிடையே விமான சேவயை வழங்கி வருகிறது.
இன்று காலை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்.ஜி. 58 விமானமானது, துபாயிலிருந்து புறப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு வந்தது. குறிப்பிட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 189 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த விமானம் ஜெய்ப்பூரில் காலை 9 மணியளவில் தரையிறங்க முற்பட்டது.
அப்போது ஜெய்ப்பூரில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையானது, விமானத்தின் டயர் வெடித்திருப்பதாக பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.
Rajasthan: Emergency landing of SpiceJet Dubai-Jaipur SG 58 flight with 189 passengers took place at Jaipur airport at 9:03 am today after one of the tires of the aircraft burst. Passengers safely evacuated. pic.twitter.com/H7WE9Yxroy
— ANI (@ANI) June 12, 2019
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்.ஜி. 58 விமானத்தின் டயரானது, துபாயிலிருந்து புறப்படும் போதே வெடித்திருக்க கூடும் என்றும் கட்டுப்பாட்டு அறை விமான ஓட்டியை எச்சரித்தது. எனவே ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, மிக கவனமாகவும் ,மெதுவாகவும் விமானத்தை தரையிறக்குமாறு பைலட்டுக்கு அறிவுறுத்தியது.
இத்தகவல் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரவியது. இதனால் விமான பயணிகளின் உறவினர்கள் பீதியடைந்தனர். விமானம் தரையிறங்கும் வரை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அச்சம் நிலவியது.
தங்களது உறவினர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து தரையிறங்க வேண்டும் என, விமான நிலையத்தில் காத்திருந்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அடுத்து, குறிப்பிட்ட விமானத்தில் பைலட் மிக கவனமாக செயல்பட்டு 189 பயணிகளுடன் கூடிய விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
#WATCH: SpiceJet Dubai-Jaipur SG 58 flight with 189 passengers onboard made an emergency landing at Jaipur airport at 9:03 am today after one of the tires of the aircraft burst. Passengers safely evacuated. #Rajasthan pic.twitter.com/f7rjEAQt7M
— ANI (@ANI) June 12, 2019
விமானத்தின் ஒரு டயர் வெடித்திருந்ததால் தரையிறங்கும் போது சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அதனை லாவகமாக சமாளித்து, பயணிகளுடன் இருந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கி விட்டார் விமான ஓட்டி. இதன் பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்தே அவர்களை வரவேற்று அழைத்து செல்ல வந்த உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது குறித்து தகவல் தெரிவித்த விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர், குறிப்பிட்ட விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்படவில்லை என விளக்கமளித்தார். எனினும் விமானத்தின் டயர் வெடித்தது எதிர்பாராத சம்பவம்.
டயர் வெடித்த விமானத்தை பொறியாளர்கள் குழு ஒன்று பரிசோதித்து வருகிறது. அவர்களின் அறிக்கைக்கு பின்னரே எதனால் டயர் வெடித்தது என்ற உண்மை நிலவரம் தெரிய வரும் என்றார்.