பெங்களூரில் கொட்டித் தீர்த்த பேய் மழை! வெள்ளத்தில் மூழ்கிய பஸ்சிலிருந்து பயணிகள் தப்பியோட்டம்
பெங்களூர்: பெங்களூரில் கொட்டித் தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலையில் சென்ற அரசு பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் கடந்த இரு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆரம்பித்த மழை இரவு வரை பெய்தது.
மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மழை துளி மிகவும் தடிமனாக அருவியில் விழுவதைப்போல இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக மெஜஸ்டிக் அருகேயுள்ள அனந்தராவ் சர்க்கிள் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் தேங்கியிருந்த மழை நீரில் அரசு பஸ்கள் மூன்று சிக்கிக் கொண்டன. அந்த பஸ்களின் முக்கால் பாகம் உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர், சிலர் தண்ணீரில் குதித்து தப்பியோடினர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவெல்லாம் தூங்க முடியாமல் மக்கள் அவஸ்தைப்பட்டனர். பல இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூர் நகரின் தாழ்வான பகுதிகளில் இன்று காலை வரையில் வெள்ளம் வடியவில்லை.
பெங்களூரில் வெறும் 3 மணி நேரத்திற்குள் 8.9 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளதாகவும், காற்றின் வேகம் 20 முதல் 25 கிலோ மீட்டர் அளவுக்கு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று, வெள்ளிக்கிழமை மாலையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications