ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு.. தயாநிதி, கலாநிதி மாறனுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பல்ல - சு.சுவாமி
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாறன் சகோதரர்களுக்கு ஆறுதலை அளிக்கக் கூடியது இருக்கும் எனக் கருதமுடியாது என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவர்களுக்கு ஆறுதலை அளிக்கக் கூடியது இருக்கும் எனக் கருதமுடியாது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்துள்ளார். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக தாம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. அதில் தயாநிதி மாறன் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும்,
அந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பே முக்கியமானது என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். மாறன் சகோதரர்களுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பு என ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை எப்படி கருத முடியும்? மலேசி்ய தொழில் அதிபர் சிவசங்கரனை மிரட்டியது தொடர்பான வழக்கு இது.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
அந்த வழக்கில் நான் மனுதாரராக வாதிடுகிறேன். நேற்று நடைபெற்றது என்னுடைய வழக்கு இல்லை. இது சிபிஐ தொடர்ந்த வழக்கு. முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த விவகாரத்தில் மாறன் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்பது தான் முக்கிய குற்றச்சாட்டு என்றார்.