சாப்பாடு தீர்ந்ததால் நின்றுபோன திருமணம். கடைசியில் மாப்பிள்ளை செய்த ட்விஸ்ட்
குஜராத்: சூரத்தில் திருமண விழா நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென சாப்பாடு இல்லாததால் மாப்பிள்ளை குடும்பத்திற்கும், மணமகள் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருமணத்தை நிறுத்துமாறு மணமகனின் தந்தை கூறிய நிலையில் கடைசியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
குஜராத் மாநிலம், சூரத்தின் வராச்சா பகுதியில் திருமண விழா நடந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த மணமக்கள் இருவருக்கும் திருமண சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. கோலாகலமாக அனைத்து சடங்குகளையும் மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் செய்துள்ளனர். இந்நிலையில், விழாவில் திடீரென உறவினர்களுக்கான விருந்து சாப்பாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உணவு தீர்ந்துபோன விஷயம் மாப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால், மணப்பெண்ணின் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எவ்வளவு சொல்லியும் மணமகனின் வீட்டார் சமாதானம் ஆகாமல் இருந்துள்ளனர். உச்சக்கட்ட பதட்டம் அரங்கேறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாப்பிள்ளை தான் திருமணம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனாலும் மணமகனின் தந்தை அதற்கு அனுமதிக்கவில்லை. செய்வதறியாது நின்ற மணமகளின் குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து துணை காவல் ஆணையர் அலோக் குமார் கூறியதாவது: பீகாரைச் சேர்ந்தவர்கள் ராகுல் பிரமாத் மஹ்தோ மற்றும் அஞ்சலி குமாரி தம்பதி. இவர்கள் இருவருக்கும் சூரத்தின் வராச்சா பகுதியில் உள்ள லட்சுமி ஹாலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண விருந்துக்கான உணவு தீர்ந்ததால் மணமகனின் குடும்பத்தினர் திடீரென திருமணத்தை நிறுத்தினர்.
கிட்டத்தட்ட அனைத்து திருமண சடங்குகளும் நடந்து முடிந்த நிலையில் மாலை மாற்றுவது மட்டுமே இருந்தது. இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே போதிய அளவு உணவு இல்லாததால் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து, மணமகன் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால், மணப்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
என்ன செய்வதென்று தெரியாத நிலையில், உதவிக்காக காவல் துறையை நாடினர். இந்நிலையில், மாப்பிள்ளை திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும், தங்களது குடும்பத்தினர் தான் சம்மதிக்கவில்லை என்றும் மணமகள் கூறினார். இதையடுத்து, மணமகளின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க மணமகன், அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் வர மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து, மணமகனை மட்டும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணப்பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தோம். இருவரும் காவல் நிலையத்தில் முறையாக மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
எதிர்பாராத விதமாக அவர்களுக்கு காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றிருந்தாலும், அஞ்சலி குமாரியும், ராகுல் பிரமோத் மஹந்தோவும் முறையாக திருமணம் செய்து கணவன், மனைவியாக வெளியே சென்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications