அதிக் அகமதுவிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்! சாதித்து காட்டிய யோகி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பிரபல ரவுடியான அதிக் அகமதுவிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 76 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் அதிக அளவு என்கவுன்ட்டர்கள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபல டான் அதிக் அகமது காவல்துறை பாதுகாப்பில் இருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அகமது ரவுடியாக வலம் வந்த காலத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தில் அரசு சார்பில் வீடில்லாத ஏழை எளியோருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதனையடுத்து இன்று இந்த குடியிருப்புகளை மக்களிடம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்படைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், "ஏழைகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் போக்கு 2017ம் ஆண்டுக்கு முன் அதிகமாக இருந்தது. யாருடைய நிலம் எப்போது அபகரிக்கப்படும் என்பதே தெரியாமல் இருந்தது. இதனால் சாமானிய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். ஆனால் 2017க்கு பின்னர் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. இந்த நிலங்கள் அனைத்தும் பாஜக ஆட்சியில் கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டுமல்லாது யாரெல்லாம் நிலத்தை இழந்தார்களோ அவர்களுக்கு இதே நிலத்தில் வீடும் கட்டப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு குடியிருப்பும் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, இதன் விலை ரூ. 7.5 லட்சம், ஆனால் பயனாளிகள் PMAY திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 6,000க்கும் மேற்பட்டோர் வீடு கோரி விண்ணப்பித்துள்ளனர், அதில் 1600 பேருக்கு லாட்டரி முறையில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications