கடைசி வரை சுதாரிக்காத காங்கிரஸ்.. இதுதான் மோடி மேஜிக்.. ராஜஸ்தானில் முடிவை மாற்றிய 2 விஷயங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. ஒன்று பிரதமர் மோடியின் வியூகம், இன்னொன்று கடைசி வரை சுதாரிக்காமல் காங்கிரஸ் செய்த தவறு தான் காரணம் என்கிறார்கள் அந்த ஊர் அரசியல் நிபுணர்கள்..
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 101 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியமைக்க முடியும். கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தது.

இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளது 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை. இந்த முறை 199 தொகுதிகளுக்குத்தான் நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் இறந்து போனதால் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.
199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி மற்றும் முன்னிலை என 114 இடங்களில் வசப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் 70 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கிறது. பிஎஸ்பி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளில் வென்ற போதிலும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் அரை சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது. காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததற்கு அசோக் கெலாட்டின் நீண்டகால அரசியல் அனுபவமும் ராஜதந்திரமும் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால் 2023ல் தோற்றுப்போனதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. முதல் காரணம் பிரதமர் நரேந்தி மோடியின் வியூகமும், பிரச்சாரமும் தான்.. இரண்டாவது காரணம் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தனித்து போட்டியிட்டது..
பிரதமர் மோடி வியூகம்: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாஜக பிரதானமாக முன் வைத்தார். காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகக் குற்றம் சாட்டி வந்தார். இது தவிர ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரானது; இஸ்லாமியர்களுக்கு ஆதரவானது என்னும் பிரச்சாரமும் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டது. ராஜஸ்தானில் முக்கிய இந்து மத விழாக்கள் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் இல்லாமல் நடப்பதில்லை என்றும் மோடி விமர்சித்து வந்தார். கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தின்போது அறிவிக்கப்பட்ட இலவச உணவு தானியத் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்ததும் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக கூறுகிறார்கள்.
இந்தியா கூட்டணி தனித்து போட்டி: ராஜஸ்தானில் பாஜக வெற்றிக்கும் காங்கிரஸ் தோல்விக்கும் முக்கிய காரணம் இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாதது மடடுமே இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் , சமாஜ்வாதி, போன்ற கட்சிகளை அனுசரித்து தொகுதிகளை ஒதுக்கி காங்கிரஸ் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸ் கண்டிப்பாக வென்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என ராஜஸ்தான் பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். ராஜஸ்தானில் மட்டுமல்ல.. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் இந்தியா கூட்டணியை அணுசரித்து போயிருந்தால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள் . பாஜகவை வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பது ஒரே வழி என்பதை இந்த நான்கு மாநில தேர்தல்கள் உணர்த்தி இருப்பதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications