ம.பி. பா.ஜ.க. முதல்வரின் சொந்த ஊரில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லையாம்!
சேமாலியா பதார் ( செஷோர்): மத்திய பிரதேச மாநில முதல்வரான பா.ஜ.க. வின் சிவராஜ்சிங் சவுகானின் சொந்த ஊரான செஷோர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள செஷோர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட கொர்க்கு எனும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 5 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட 50 குழந்தைகளும் இங்கு உள்ளனர்.
இந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் ஏதும் இல்லாததால், படிப்பதற்காக மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பள்ளிக்கு காட்டு வழிப்பாதையில் 7 கி.மீ நடந்தே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இவர்களுக்கு வரும் கடிதத்தில் உள்ள குறிப்புகளை தெரிந்து கொள்ள 5 கி.மீ தொலைவிலுள்ள இன்னொரு கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.
இதுகுறித்து அந்த கிராம வாசியான கலேராம் கூறுகையில்,
நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் கடந்தும் எங்களது வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது என்கிறார்.
தேர்தலின் போது கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்கள் இங்கு வருகின்றனர். அப்போது பள்ளிக் கூடம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வருபவர்கள் எங்களை கண்டு கொள்வதே இல்லை. எனது மகன் படிப்பதற்கான வாய்ப்பு இங்கே இருந்தால் அவனுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்கித்தர நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் கரன் சிங்.
இது மத்திய பிரதேச மாநில முதல்வரின் சொந்த ஊர் மட்டுமின்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.
"இல்லை என்ற வார்த்தையே என் அகராதியில் கிடையாது"- என அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய சிவராஜ் சிங் சவுகானுக்கு, அருகி வரும் இந்த பழங்குடியின மக்களின் தேவை குறித்து அறியாமல் போனது ஏனோ?!!