டெல்லியில் சுதந்திர தினநாளில் குண்டுகள் வெடிக்கும்.. அமெரிக்காவில் இருந்து வந்த போன் மிரட்டல்
டெல்லி: வரும் 15ம் தேதி டெல்லி மற்றும் நொய்டாவில் குண்டுகள் வெடிக்கும் என அமெரிக்காவில் இருந்து வந்த போன் அழைப்பால் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நொய்டாவில் வசிக்கும் அமித் என்பவருக்கு கடந்த 11ம் தேதி இரவு போன் அழைப்பு வந்துள்ளது.
எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர், ஹலோ, 15ம் தேதி டெல்லி மற்றும் நொய்டாவில் குண்டுகள் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். முதலில் இதை ஜோக் என்று நினைத்த அமித் பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் அந்த எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து அழைப்பு வந்தது தெரிய வந்துள்ளது. இந்த அழைப்பு போலியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் போலீசார் இந்த விஷயத்தை லேசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இதையடுத்து டெல்லி மற்றும் நொய்டாவில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.