சந்திரபாபு நாயுடுவின் திமிர் பேச்சு எதிரொலி- 32 தமிழருக்கு ஜாமீன் தர திருப்பதி கோர்ட் மறுப்பு
திருப்பதி: செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 32 தமிழருக்கு ஜாமீன் தர திருப்பதி நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த சம்பவத்துக்கு பின்னர் ஆந்திர மாநில அரசு செம்மர கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவை ஏற்படுத்தி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த சிறப்பு படை போலீசார் சித்தூர், திருப்பதி பேருந்து நிலையங்களில் சாதாரணமாக வந்து இறங்கும் தமிழக தொழிலாளர்களை செம்மரக்கடத்தல் கூலித்தொழிலாளர்கள் எனக்கூறி கைது செய்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

32 தமிழர் கைது
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 4-ந் தேதியன்று திருப்பதி சென்றது. அப்போது அந்த ரயிலில் இறங்கிய தமிழர்கள் 32 பேரை ஆந்திரா போலீசார் செம்மரம் வெட்ட வந்துள்ளதாக கூறி கைது செய்தனர்.

ஜெ. கடிதம்
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் குறித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார்.

சந்திரபாபு திமிர் பேச்சு
ஆனால் சந்திரபாபு நாயுடுவோ, 32 பேரும் செம்மரக் கடத்தல்காரர்களே... அவர்களை கைது செய்யது நியாயம்தான். 32 பேரையும் விடுதலை செய்ய முடியாது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொள்கிறோம் என திமிராக கூறியிருந்தார்.

ஜாமீன் மனு
இதனால் 32 தமிழர் விடுதலை கேள்விக்குறியானது. இந்த நிலையில் 32 தமிழருக்கும் ஜாமீன் கோரி திருப்பதி 5-வது முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

நிராகரிப்பு
ஏற்கனவே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு 32 பேரையும் விடுதலை செய்ய முடியாது என கூறியதால் அவர்களது ஜாமீன் மனுக்களை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து சித்தூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications