‘எப்டியிருந்த நான் இப்டியாகிட்டேன்’... டெல்லியில் வேலைக்காரப் பெண் மாடலான கதை!
டெல்லி: பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளரான மன்தீப் நாகி, தனது புதிய ஆடைகளைப் பிரபலப்படுத்தும் முயற்சியாக, தோழி வீட்டு வேலைக்காரப் பெண்ணை, புதிய மாடலாக அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி. சமீபத்தில் இவர் பல புதிய ஆடை வகைகளை உருவாக்கினார். அவற்றை புதிய மாடல் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினார் மன்தீப்.
அதற்கான சரியான பெண்ணை அவர் தேடி வந்தார். அப்போதுதான் தனது தோழி வீட்டுப் பணிப்பெண்ணை அவர் கண்டார். தனது ஆடைகளை விளம்பரப்படுத்த அவர் தான் சரியான மாடல் என முடிவெடுத்தார் அவர்.

இன்ப அதிர்ச்சி...
இது தொடர்பாக அப்பெண்ணிடமும் மன்தீப் பேசினார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அப்பெண், மன் தீப் பேசியதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆலோசித்து விட்டு கூறுவதாக அவர் பதிலளித்தார்.

போட்டோஷூட்...
பின்னர் ஒருநாள் இடைவெளிக்குப் பின் மன் தீப்பிடம் சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணை வைத்து போட்டோஷூட் நடத்தினார் மன் தீப்.

அவகாசம்...
இது குறித்து மன்தீப் கூறுகையில், ‘எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் என் தோழி வீட்டு பணிப்பெண் இருந்தார். நான் முதலில் என் ஆசையை அவரிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார்.

சம்மதம்...
பின்னர் அவர் மாடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார். தான் அணிய போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.

விதவிதமான போஸ்...
அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம். அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம். முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.

மறக்க முடியாத அனுபவம்...
எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த மாடலிங் ஷூட்டிங் மூலம் அப்பெண்ணின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமான கூற இயலாது. ஆனால், அவர் இந்த மாடலிங் அனுபவத்தை எளிதில் மறக்க மாட்டார் என நிச்சயமாகக் கூறுவேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications