"இது சும்மா டிரைலெர்தான்.. மெயின் பிக்சர 16ம்தேதி பார்ப்பீங்க..": மோடி
காந்திநகர்: சீமாந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக கூட்டணி பெற்றுள்ள வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான துவக்க விழா என்று பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திரா பிரிந்து ஜூன் மாதம் 2-ந்தேதி அதிகாரப்பூர்வமாக தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என இரு மாநிநிலங்கள் உருவாக உள்ளன. 2 மாநிலங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 10 மாநகராட்சி, 145 நகராட்சிகளுக்கு மார்ச் 30-ந்தேதியும், மற்றும் ஊராட்சி பதவிகளுக்கு ஏப்ரல் 6, 11-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இருப்பினும் இரு பிராந்தியங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபிறகுதான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சீமாந்திராவில் 36 நகராட்சிகளை தெலுங்குதேசம் கைப்பற்றியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 934 உள்ளாட்சி இடங்களை தெலுங்குதேசமும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 634 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆனால் காங்கிரஸால் வெறும் 45 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
அதே நேரத்தில் தெலுங்கானாவில் 9 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சியும் 5 நகராட்சிகளையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கைப்பற்றியுள்ளன. மேலும் பல நகராட்சிகளில் காங்கிரஸ் முன்னணி வகித்து வருகிறது. மாநகராட்சிகளில் நிஜாமாபாத், ராமகுண்டத்தை காங்கிரஸும் கரீம்நகரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கைப்பற்றியுள்ளன. மொத்தமாக தெலுங்கானாவில் காங்கிரஸ் 394 இடங்களையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 245 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி இங்கு 129 உள்ளாட்சி இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து தனது டுவிட்டர் வலைத்தளத்தில் நரேந்திரமோடி கூறியுள்ளதாவது: வரும் 16ம்தேதி முடிவுகளுக்கான துவக்க விழாதான் இந்த வெற்றி. சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுமே நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தரப்போகின்றன. பாஜக கூட்டணிக்கு அதிக இடங்களை அளித்ததற்காக சீமாந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.