நீதிபதி அளித்த இந்த தண்டனையை நடிகை பூஜா காந்தியால் மறக்கவே முடியாது!
ரெய்ச்சூர்: நீதிமன்றத்தை அவமதித்த கன்னட நடிகை பூஜா காந்தியை ரெய்ச்சூர் நீதிமன்ற நீதிபதி ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்தார்.
கன்னட நடிகை பூஜா காந்தி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரெய்ச்சுரில் போட்டியிட்டார். பிரச்சாரத்தின்போது அவர் தேர்தல் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான கார்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு ரெய்ச்சூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்திற்கு வந்த அவரை நீதிபதி ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்தார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன் பிறகு அவரது மனுவை விசாரித்து ஜாமீன் வழங்கினார்.
பூஜா காந்திக்கு ஜாமீன் கிடைத்தபோதிலும் அவர் நீதிமன்றத்தில் காத்திருந்த 1 மணிநேரத்தை மறக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.