இந்த பாஜக எம்.எல்.ஏ. தொழுவத்தில் தங்குவதெல்லாம் சரிதான்.. ஆனா படுக்க பாய் போதாதா, மெத்தை எதுக்கு??
பெங்களூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் மாட்டுத் தொழுவத்தில் தங்குவது அந்த ஊரில் பெரிய செய்தியாகியுள்ளது. எல்லாம் சரிதான். நல்ல விஷயம்தான். ஆனால் மாட்டுத் தொழுவத்தில் மெத்து மெத்தென்ற மெத்தையைப் போடடு அதில் ஏறி பாதுகாப்பாக படுத்து தூங்கும் விஷயம் மட்டும்தான் இடிக்கிறது.
சுரேஷ் குமார், பெங்களூரு ராஜாஜி நகர் சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. ஆவார். கடந்த எதியூரப்பா அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர். நன்றாக பேசக் கூடியவர். அவரது பேச்சைக் கேட்க நல்ல கூட்டமும் கூடும்.
தற்போது கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. அதில் பாஜக சார்பில் ஸ்ரீனிவாஸ் பிரசாத் போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸை விட்டு விட்டு பாஜகவுக்குத் தாவியவர் ஆவார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்துள்ளார் சுரேஷ்குமார். வந்த இடத்தில்தான் மாட்டுத் தொழுவத்தில் டெண்ட் போட்டு, ஸ்டண்ட் அடித்துக் கொண்டுள்ளார்.
"ஸ்டார் ஹோட்டல் பேடா"
நஞ்சன்கூடு பிரசாரத்திற்காக வந்த சுரேஷ் குமாருக்கு கட்சி சார்பில் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க அறை போடப்பட்டிருந்ததாம். ஆனால் அதை வேண்டாம் என்று கூறி விட்டாராம் சுரேஷ் குமார். மாறாக மாட்டுத் தொழுவம் ஒன்றை தனது தங்குமிடமாக தேர்வு செய்தாராம்.
மாட்டுத் தொழுவத்தில் சுரேஷ் குமார்
அங்குள்ள மாட்டுத் தொழுவம் ஒன்றில்தான் அவர் தங்கியுள்ளார். அங்கிருந்துதான் பிரசாரத்திற்குப் போகிறார் வருகிறார். அவரைச் சுற்றி எப்போதும் சிலர் உள்ளனர். அவர்களுடன் ஜாலியாகப் பேசிப் பொழுது போக்குகிறார் சுரேஷ் குமார்.
இதெல்லாம் வரலாறு அமைச்சரே!
இதுகுறித்து சுரேஷ் குமார் கூறுகையில், நான் இப்படி பொது வெளியில் தங்குவது புதிதில்லை. ஏற்கனவே 2013ம் ஆண்டு பெங்களூரிலிருந்து திருப்பதிக்குப் பாத யாத்திரை போனபோதும் இப்படித்தான் தங்கினேன். அதேபோல 2015ல் தர்மசலா பாதயாத்திரையின்போதும் இதேபோலத்தான் தங்கினேன் என்றார் சுரேஷ் குமார்.
செம கூட்டம்
மாட்டுத் தொழுவத்தில் தங்கியிருக்கும் சுரேஷ் குமாரை வேடிக்கை பார்க்கவும், அவருடன் பேசவும் நல்ல கூட்டம் கூடுகிறது. ஆதரவாளர்கள் புடை சூழ இருக்கும் சுரேஷ் குமார் மாட்டுத் தொழுவத்தில் தங்கியபடி பேப்பர் படிக்கிறார். அரசியல் பேசுகிறார். ஏப்ரல் 9ம் தேதி நஞ்சன்கூடு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மெத்தை எதுக்கு!
சொகுசு, ஆடம்பரம் வேண்டாம் என்று கூறும் சுரேஷ் குமார் மாட்டுத் தொழுவத்தில் தங்குவது பாராட்டுக்குரியதுதான். நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் சாதாரணமாக பாய் விரித்துப் படுக்காமல் மெத்து மெத்தென்று மெத்தையைப் போட்டு படுத்திருப்பது மட்டும்தான் லேசாக இடிக்கிறது.