இவரும் மனுஷன்தானா...?
டெல்லி: டெல்லியில் நேற்று காலை ஒரு விபத்து. 40 வயதான மதிபூல் என்பவர் விபத்தில் சிக்கி அடிபட்டு சாலையில் கிடந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக அவர் விழுந்து கிடந்தும், ரத்தம் கொட்டியும் கூட யாரும் அவரை மீட்க முன்வரவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் நின்றார். பரவாயில்லையே ஒருவராவது மீட்க வந்தாரே என்று பார்த்தால் அவர் செய்த காரியம்.. சீ.. இவரும் மனிதனா என்று சொல்ல வைத்து விட்டது.
விழுந்து கிடந்த மதிபூலுக்கு அருகே கிடந்த அவரது செல்போனை மட்டும் பத்திரமாக எடுத்துக் கொண்டு அந்த நபர் போய் விட்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி மூலம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
மேற்கு டெல்லியில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில்தான் இந்த விபத்து நடந்தது. மதிபூல் ஒரு இ ரிக்ஷா டிரைவர் ஆவார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீஸார் "விரைந்து" வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து நெடு நேரமாகி விட்டது என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தை மதிபூல். தனது குடும்பத்தைக் காக்க பல வேலைகளைச் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏதோ ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டுச் சென்று விட்டது. தூக்கி எறியப்பட்ட மதிபூல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர் விழுந்து கிடந்ததை அந்தப் பக்கமாக சென்ற பலரும் பார்த்துள்ளனர். ஆனால் யாரும் அருகே கூட நெருங்க வரவில்லை. வந்த ஒரே நபரும் அவரது செல்போனை மட்டும் திருடி விட்டுச் சென்ற செயல்தான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
போலீஸார் நீண்ட தாமதத்திற்குப் பிறகே வந்தனர். ஆனால் அதற்குள் மதிபூலின் உயிர் போய் விட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதிபூல். பகலில் இ ரிக்ஷா ஓட்டியும், இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்தும் சம்பாதித்து வந்தார்.
தற்போது மதிபூல் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய வேன் டிரைவர் மற்றும் மதிபூலின் செல்போனை திருடிய நபர் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.