"கன்னி கழியாத" எருமை இது.. ஹிமாச்சலி ரஞ்சா எருமை... விலை அதிகமில்லை.. ரூ. 5 கோடிதான்!
ஸ்ரீநகர்: கன்னி கழியாத எருமை இது.... பளபளப்பான மேனி.... விலை ரூ. 5 கோடி என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது ஒரு எருமை. இது விலை உயர்ந்த உயர்ரக முர்ரா ரக எருமை.
முர்ரா ரக எருமைகள் பால்வளத்துக்குப் புகழ்பெற்றவை. ஹரியாணாவின் ரோட்டக், ஹிண்ட் மாவட்டங்களில் முர்ரா எருமைகள் காணப்படுகின்றன. சிறந்த பாரம்பரியமும், இனப்பெருக்க வளமும் கொண்ட எருமைகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை போகின்றன. இவற்றின் விந்துகளை விற்பனை செய்வதன் மூலம் அதன் உரிமையாளர்கள் ஏராளமாக வருவாய் ஈட்டுகின்றனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டம் கோரி தவிரி ஊராட்சியைச் சேர்ந்தவர் நரேஷ் சோனி ,44. நகைக்கடை உரிமையாளரான இவர் ஹிமாச்சலி ரஞ்சா என்ற 30 மாத முர்ரா ரக எருமைகளை வளர்த்து வருகிறார்.

1000 கிலோ எடை
சுமார் 1,000 கிலோ எடையும், 13 அடி நீளமும், 5.8 அடி உயரமும் கொண்ட இதனை அவர் வரும் வெள்ளிக்கிழமை ஏலம் விடவுள்ளார். இதற்கு ரூ.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலம் குறித்த தகவல்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ரூ. 5 கோடி
நரேஷ் சோனி கூறும்போது, ஹரியானா மாநிலம் குருசேத்திரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற எருமை ரூ.9 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனது ஹிமாச்சலி ரஞ்சா ரூ.5 கோடிக்கு ஏலம் போகும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் நரேஷ் சோனி.

உயர்ரக தீவனம்
ஹிமாச்சலி ரஞ்சாவுக்கு தினமும் வழக்கமான தீவனங்களுடன் ஏராளமான ஆப்பிள்கள், 2.5 கிலோ சோயாபீன், 2.5 கிலோ கொண்டைக் கடலை, 10 கிலோ மாட்டுத்தீவனம், ஒரு கிலோ நெய் உணவாக அளிக்கப்படுகிறது.

மேனி பளபளப்பு
எருமையின் மேனி பளபளப்பாக இருப்பதற்காக தினமும் 2 லிட்டர் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படுகிறது. இதன் பராமரிப்புக்காக தினமும் சராசரியாக ரூ.1,500 செலவாகிறது. ஏலத்தின் சிறப்பம்சமாக, ரஞ்சா இன்னும் உடலுறவில் ஈடுபடவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலம் போகும் எருமை
ஏலத்தில் பங்கேற்க, பிலாஸ்பூர் எம்எல்ஏ. பாம்பெர் தாகூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சோனி அழைப்பு விடுத்துள்ளார். ரூ.5 கோடி விலை மதிப்புடையை எருமை ஏலம் விடப்படுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக எம்எல்ஏ தாகூர் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் எருமை
மேற்கு உத்தரப் பிரதேசத்திலும் இந்த எருமைகள் உள்ளன. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை கரம்வீர் சிங் செலவிடுகிறார். நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்கிறது.

எருமையின் விந்தணு
5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை உட்கொள்கிறது. தினமும் 4 கி.மீட்டர் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்கிறது. யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்லி வரை விந்தணு எடுக்கப்பட்டு 35 மில்லி வரை செறிவாக்கம் செய்யப்படுகிறது. 0.25 மில்லி கொண்ட ஒரு குப்பி விந்தணு ரூ.1500க்கு விற்கப்படுகிறது.

காத்திருக்கும் விவசாயிகள்
எருமையின் விந்தணுவை வாங்க கரம்வீர் சிங்கின் பண்ணையில் விவசாயிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் யுவராஜ் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது. முர்ரா வகை எருமைகள் சராசரியாக நாளொன்றுக்கு 25 லிட்டர் வரை பால் கொடுக்கிறதாம்.












Click it and Unblock the Notifications