சவுதி தூதரக அதிகாரி வீட்டு சமையல்கார பெண்ணை அடித்து, பட்டினி போட்டு கத்தியை காட்டி மிரட்டல்
டெல்லி: டெல்லியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் சமையல் வேலை பார்த்த பெண்ணை மிரட்டி, தினமும் ஒரேயொரு சப்பாத்தி மட்டுமே கொடுத்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள சவுதி தூரக அதிகாரி தனது வீட்டில் வேலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் வீட்டில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நீத்து என்பவர் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
அவர் தான் மைதி என்ற என்.ஜி.ஓ.வுக்கு தனது தோழி அனிதா மூலம் தகவல் அளித்து தங்களை காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து நீத்து கூறுகையில்,

வேலை
கேரளாவைச் சேர்ந்த அன்வர் என்பவர் தான் என்னை அந்த தூதரக அதிகாரியின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி சமையல் வேலைக்கு சேர்த்துவிட்டார். எனக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று கூறினார்கள்.

சம்பளம்
பேசியபடி எனக்கு சம்பளமே அளிக்கவில்லை. மேலும் வாரத்தில் ஒரு நாள் கூட விடுப்பு இன்றி வேலை செய்ய வைத்தனர். தினமும் எனக்கு ஒரு சப்பாத்தி, பால் இல்லாத டீ அளித்து பட்டினி போட்டனர். சமையல் தவிர வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது ஆகிய வேலையையும் என்னை செய்ய வைத்தனர்.

நேபாள பெண்கள்
வீட்டில் வேலை செய்த நேபாள பெண்களையும் என்னையும் பேச விடமாட்டார்கள். நாங்கள் தனித்தனி அறையில் இருந்தோம். இரவில் அதிகாரியின் குடும்பத்தார் இரண்டு முறை சாப்பிடுவார்கள். இரவு 8 மணிக்கும், அதிகாலை 2 மணிக்கும் சாப்பிடுவார்கள். அதனால் நாங்கள் காலை 4 மணி வரை விழித்திருக்க வேண்டும். 6 மணிக்கு எல்லாம் அந்த அதிகாரியின் மனைவி எங்களை எழுப்பிவிடுவார்.

தப்பிக்க
அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் நாங்கள் தப்பித்து ஓட நினைத்தோம். இதை எப்படியோ அறிந்த அதிகாரி எங்களை வீட்டில் வைத்து பூட்டிவிட்டார். அந்த அதிகாரியின் மனைவி என்னை திட்டி, அடித்து, கத்தியை காட்டி கொன்றுவிடுவேன் என மிரட்டினார். நான் என் கணவருடன் செல்போனில் பேசியதை பார்த்த அதிகாரி போனை பறித்துக் கொண்டு அன்வரை வரவழைத்தார்.

தப்பித்தேன்
அன்வர் வந்து என்னை வீட்டிற்கு வெளியே காத்திருக்குமாகு கூறினார். வெகுநேரம் காத்திருந்தும் அவர் வரவில்லை. பின்னர் என் கணவரை வரவழைத்து நான் அங்கிருந்து சென்றேன். நான் சவுதி மற்றும் நேபாள தூதரகங்களில் நேபாள பெண்கள் இருவரின் நிலை பற்றி தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நான் அந்த வீட்டில் 25 நாட்கள் வேலை பார்த்தேன். அதற்குரிய சம்பளத்தை வாங்காமல் விட மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications