கன்னடம் தெரியாததால் நாகாலாந்து தம்பதி மீது பெங்களூரில் தாக்குதல்! சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கைது
பெங்களூர்: கன்னடம் பேசத்தெரியாத நாகாலாந்து தம்பதி பெங்களூரில் தாக்கப்பட்டனர். மணிப்பூர் வாலிபர்கள் சிலர் சமீபத்தில் இதே காரணத்துக்காக பெங்களூரில் தாக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் கடந்த சனிக்கிழமை மாலை, வடக்கு பெங்களூரை அடுத்த ஹெசருகட்டா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் பஞ்சர் ஆனதாக தெரிகிறது.
அப்போது மழையும் பெய்ததால் மிகுந்த சிரமத்துக்கிடையே, தம்பதிகள் காரை பஞ்சர் போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக வந்த ஒரு எஸ்யூவி வகை காரில் இருந்து நால்வர் இறங்கி வந்து என்ன செய்கிறீர்கள் என்று கன்னடத்தில் கேட்டுள்ளனர். நாகாலாந்து தம்பதிக்கு கன்னடம் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பதில் சொல்லியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்த நான்கு வாலிபர்களும், வெளிநாட்டுக்காரர்களுக்கு இங்கு என்ன வேலை, முதலில் இந்தியாவை விட்டு வெளியே போங்கள் என்று கூறி மிதித்து தள்ளிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த தம்பதி, சோழதேவனஹள்ளி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் புகாரை வாங்க மறுத்த போலீசார், தொட்டபள்ளாப்பூர் போலீஸ் நிலையம் செல்ல கூறியுள்ளனர்.
இதையடுத்து அலைக்கழிப்புக்கு பிறகு திங்கள்கிழமைதான் தம்பதிகள் போலீசில் புகார் செய்ய முடிந்தது. இதனிடையே வழக்கு தொடர்பாக நான்கு வாலிபர்களையும் இப்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஹரீஷ், மகேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய மூவர் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகும். ரத்தன் என்பவர் ஜிம் நடத்துபவராகும். கடந்த 14ம்தேதி மணிப்பூரை சேர்ந்த வாலிபர்களை கன்னடம் பேச தெரியாது என்பதற்காக தென்பெங்களூரின் புறநகர் பகுதியான கொத்தனூரில் சில வாலிபர்கள் அடித்து உதைத்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications