சபரிமலை வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்த புலியால் பீதி!
பம்பை: சபரிமலை வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்த புலியால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது.
சபரி அய்யப்பன் கோவில் நடை திறந்து இருக்கும் நாட்களில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு இடம் பெயர்ந்து விடும்.
தற்போது பக்தர்கள் வருகை இல்லாததால் காட்டில் உள்ள விலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்கு வர தொடங்கியுள்ளன. சபரிமலை பகுதியில் உள்ள பம்பாவுக்குள் நேற்று ஒரு புலி நுழைந்தது.
அந்த புலி துளசிராம் என்ற டீக்கடைக்காரர் வளர்த்து வந்த நாயை கடித்து குதறியது. நாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த துளசிராம் வெளியில் புலி நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
ஊருக்குள் புலி புகுந்தது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வன ஊழியர்கள் அங்கு சென்று வெடிகளை வெடித்தனர்.
சுமார் 3 மணி நேரத்துக்குப் பின்னரே ஊர் உலா வந்த புலி காட்டுக்குள் திரும்பிச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications