ஓடும் வேனில் திஹார் சிறை கைதிகளுக்கு இடையே மோதல்: விசாரணை கைதி பலி
டெல்லி: சகேத் நீதிமன்றத்தில் இருந்து திஹார் சிறைக்கு செல்லும் வழியில் வாகனத்திற்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விசாரணை கைதி ஒருவர் பலியானார்.
டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் கைதிகளில் 50 பேரை போலீசார் சனிக்கிழமை சகேத் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு கைதிகள் வேனில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வேன் தெற்கு டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸ் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் மனோஜ்(28) என்ற கைதிக்கும் பிற கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயம் அடைந்த மனோஜ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 2005ம் ஆண்டில் இருந்து திஹார் சிறையில் இருந்து வந்த மனோஜை விஷால், ராஜு மற்றும் சல்மான் ஆகியோர் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விஷாலுக்கு மனோஜ் மீது விரோதம் இருந்துள்ளது. அதனால் நீதிமன்றத்தில் இருந்து வருகையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மனோஜை தாக்கியுள்ளார் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் திஹார் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications