உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு... இன்று மாலையே பதவியேற்கிறார்
டேராடூன்: திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்திருந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக இருந்தார். இருப்பினும், அவரது செயல்பாடுகளில் எம்எல்ஏகள் சிலர் அதிருப்தியடைந்தனர். பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் திரிவேந்திர சிங் ராவத்தை நேரில் அழைத்துப் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

காரணம் என்ன
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரிவேந்திர சிங் ராவத், உத்தரகண்ட் முதல்வராக இருந்தது சந்தோஷம். கட்சி தலைமைக்குக் கட்டுப்படுகிறேன். இந்த முடிவு டெல்லி தலைமை மூலம் எடுக்கப்பட்ட முடிவு என்று கடுப்பாகவே பதிலளித்தார். ஹரியானா மாநிலத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாடுகள் மீது மக்களுக்குத் திருப்தி இல்லாததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய முதல்வர்
அதன் பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வரா யாரை தேர்வு செய்வது என்ற ஆலோசனையில் பாஜக தலைமை மும்முரமாக ஈடுபட்டது. மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உத்தரகண்ட் அமைச்சர் தன் சிங் ராவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இருப்பினும், இறுதியாக, உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக 56 வயதாகும் தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை பதவியேற்கிறார்
உத்தரகண்ட் முதல்வராக தீரத் சிங் ராவத் இன்று மாலை 4 மணிக்குப் பதவியேற்கிறார். இது குறித்து தீரத் சிங் ராவத் கூறுகையில், "நான் திரிவேந்திர சிங் ராவத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். எனக்கு இப்போது முதல்வர் பதவியை அளித்த பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை நான் என் கனவில் நினைத்துப் பார்த்ததில்லை" என்றார்.

யார் இந்த தீரத் சிங் ராவத்
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை உத்தரகண்ட் மாநில பாஜக பிரிவு தலைவராக தீரத் சிங் ராவத் இருந்துள்ளார். தற்போது பாஜக தேசிய செயலளாரக இருக்கும் அவர், கடந்த காலங்களில் உத்தரகண்ட் சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்வால் தொகுதியின் எம்பியாக தற்போது தீரத் சிங் ராவத் உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தீரத் சிங் ராவத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications