திருப்பதியில் சிறிசேன தரிசனத்துக்காக உடைக்கப்பட்ட தங்கக் கதவின் பூட்டு- பூதாகரமாகும் சர்ச்சை!
திருமலை: திருப்பதிக்கு வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வழிப்பாட்டுக்காக தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
சுப்ரபாதம் சிறப்பு தரிசனத்தில் நேற்று புதன்கிழமை காலை சுவாமியை தரிசனம் செய்ய சிறிசேன வந்த போது, ஏழுமலையான் கோயிலின் மூலவர் அறையின் தங்கக் கதவுகளை திறக்க கோயில் ஊழியர்கள் வந்தனர்.

எப்போதும் போல பூட்டுக்குள் சாவியை நுழைத்து திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக் கொண்டது. செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் பொறியாளரை வரவழைத்து உடனடியாக பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.
பிறகு வழக்கம் போல சுப்ரபாத சேவை துவங்கி சிறிசேன சுவாமியை தரிசனம் செய்தார். மூலவர் அறைக் கதவின் பூட்டு உடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என்று கோயில் தேவஸ்தானம் சார்பில் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை கோயில் பூட்டு உடைக்கப்பட்டதே இல்லை, இதற்கு பரிகாரம் செய்தே ஆக வேண்டும் என்று மற்றொரு தரப்பு சொல்வதால் சர்ச்சை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications