சந்திரகிரகணம்.. ஜன.31ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!
திருப்பதி: சந்திரகிரகணத்தையொட்டி 31ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 31ம் தேதி சந்திர கிரகணமாகும். எனவே, அன்றையதினம், காலை 11 மணி முதல் இரவு 10.30 மணிவரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். ஏற்கனவே கோயிலுக்கு சென்ற பக்தர்கள், 31ம் தேதியன்று, இலவச உணவு மற்றும் காத்திருப்பு அறையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதை மனதில் கொண்டு, திருமலை செல்லும் பக்தர்கள் தங்கள் பயண திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவில்
இதே போல 31ஆம் தேதியன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நடை சாத்தப்படுகிறது. தைப்பூசத்தை ஒட்டி ராமேஸ்வரம் கோவிலில் அதிகாலை, 2.30 மணிக்கு நடை திறந்து ஸ்படிகலிங்கம், கால பூஜைகள் நடக்கும். காலை, 7 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் லட்சுமனேஸ்வர் கோவிலுக்கு புறப்பாடானதும் நடை சாத்தப்படும்.
பகல் 11 மணிக்கு லட்சுமனேஸ்வர் தீர்த்த குளத்தில் அலங்கார தைப்பூச தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருவர். கோவில் நடை மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். மாலை, 5 .05 முதல் நடை சாத்தப்பட்டு மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, இரவு,7 மணிக்கு தீர்த்தவாரி கொடுப்பார். இரவு 9 மணிக்கு கோவிலில் சந்திர கிரஹண அபிஷேகமும் பள்ளியறை பூஜையும் நடக்கும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.