சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி பிரமோற்சவம் நிறைவு... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
ஏழுமலையான் கோயிலில் கடந்த 16-ம் தேதி தொடங்கிய பிரமோற்சவ விழாவில் தினமும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளிய மலையப்பசாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை 20-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து நேற்று (புதன்) தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது.
பிரமோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் வராகசாமி கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டருளினர். அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் பிரமோற்சவ விழா கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் தொடங்கும் நவராத்திரி பிரமோற்சவம் தொடர்ந்து 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.