ஹைதராபாத்துக்கு போட்டியாக சீமாந்திராவின் ஐடி தலைநகராகப்போகும் திருப்பதி
திருப்பதி: தெலுங்கானாவுக்கு ஹைதராபாத் சென்றுவிட்டதால் சீமாந்திராவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக திருப்பதியை மாற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. திருப்பதியில் போதிய அளவுக்கு அடிப்படை வசதிகள் இருப்பதால், ஹைதராபாத்தை ஐடியில், முன்னணிக்கு கொண்டுவந்த சந்திரபாபுவின் கவனம் தற்போது திருப்பதி பக்கம் திரும்பியுள்ளது.
பெங்களூரும், ஹைதராபாத்தும்
சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோதுதான் அம்மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடைந்தது. அப்போது கர்நாடகாவில் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தார். அவர் பெங்களூருக்கு ஐடி நிறுவனங்களை கொண்டுவந்தார். சந்திரபாபு நாயுடு பல ஐடி நிறுவனங்களை ஹைதராபாத் கொண்டு சென்றார். பெங்களூரின் குளுகுளு வானிலை உள்ளிட்ட சில காரணங்களால் விப்ரோ, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி உள்ளிட்ட பிரபல ஐடி நிறுவனங்கள் பெங்களூர் சென்றபோதிலும், 2ம் இடம் ஹைதராபாத்துக்குதான் கிடைத்தது.
ஆந்திரா பிரிந்தது
ஜூன் 2ம்தேதி முதல் ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது. ஹைதராபாத் தெலுங்கானா மாநில தலைநகராக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க உள்ள சீமாந்திரா மாநிலம், இதனால் ஏமாற்றத்தை சந்தித்தது. அரசு கருவூலத்தை நிரப்பும் செழிப்பான பகுதிகள் தங்கள் மாநிலத்தில் இல்லை என்ற கவலை அவர்களுக்கு உள்ளது. ஆனால் திருப்பதி அம்மக்களுக்கு கைகொடுக்கும் இடமாக மாறப்போகிறது.
திருப்பம் தரும் திருப்பதி
சீமாந்திரா மக்களின் நம்பிக்கைக்குறிய நகரமாக திருப்பதி காட்சியளிக்கிறது. இயற்கைவளம், தட்டுப்பாடற்ற மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் சீமாந்திராவின் விஜயவாடா, விசாகபட்டிணம் போன்ற நகரங்களில் இல்லை. ஆனால் திருப்பதி இவ்வசதி அனைத்தையும் பெற்றிருப்பதுடன், மெட்ரோ சிட்டிகளான சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவே அமைந்துள்ளது. எனவே விமானம், ரயில், சாலை போக்குவரத்து வசதிகள் பிரமாதமாக உள்ளன.
தொழில் வளப்பகுதி
பெப்சி, காட்பரி, இசுஜு மோட்டார்ஸ், கோபெல்கோ உட்பட சுமார் 100 முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பிரிவை திருப்பதியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தடா பகுதியில் வைத்துள்ளன. திருப்பதியில் ஐடி நிறுவனங்கள் பெருகினால், தடா மற்றும் திருப்பதி என தென் சீமாந்திரா மாநிலமே தொழில்வளம் மிக்கதாக மாறிவிடும்.
ஊழியர்கள் கிடைப்பது எளிது
ஐடி நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்கள் திருப்பதியில் எளிதாக கிடைப்பார்கள். ஏனெனில் திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களில் இருந்து ஆண்டுதோறும் திறமைமிக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்து வெளியேவருகிறார்கள். அவர்களுக்கு திருப்பதி வேலைவாய்ப்பு கொடுக்கும் காமதேனுவாக மாறும்.
ஐடி சங்கம் நம்பிக்கை
இதுகுறித்து திருப்பதி ஐடி சங்க துணை தலைவர் கிரிதர் கூறுகையில், "திருப்பதியில் ஐடி நிறுவனம் துவங்கியதில் முதல் ஆள் நான்தான். ஆனால் இப்பிராந்தியத்தில் ஐடி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது ஹைதராபாத் வேறு மாநிலமாகிவிடுவதால் சீமாந்திராவுக்கு ஏற்ற ஐடி நகரமாக திருப்பதி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய அரசு செய்ய வேண்டியதெல்லாம், இணையதளத்துக்கான செலவை குறைப்பதும், வாடகைகளை குறைப்பதுதான். திருப்பதியில் படித்த இளம் ஊழியர்கள் எளிதாக கிடைப்பார்கள்" என்றார்.
மணிமகுடத்தில் மற்றொரு முத்து
ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆண்டுதோறும் 20 கோடி சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதில், 12 கோடி பேர் திருப்பதிக்கு மட்டுமே வருகிறார்கள். அந்த அளவுக்கு, திருமலை ஏழுமலையான் கோயில் இந்தியாவின் மணி மகுடமாக காட்சியளிக்கிறது. எனவே உலக அளவில் திருப்பதிக்கு உள்ள புகழை ஐடி நிறுவனங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.