ஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்!
ஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர்.
புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் கடந்த 10ஆம் தேதி டிட்லி புயல் உருவானது. இந்த டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை வடக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் ஆகிய மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது.

சின்னாபின்னம்
அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. பலத்த காற்றும் கனமழையும் கோர தாண்டவமாடியதில் 4 மாவட்டங்களும் சின்னாபின்னமாகியுள்ளன.

குகைக்குள் ஒதுங்கிய
மழை மற்றும் புயல் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் மீது பாறை சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

பழங்குடியின மக்கள்
கஜபதி மாவட்டத்தில் பரக்ஹாரா கிராமத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. டிட்லி புயலுக்கு பயந்து பழங்குடியின மக்கள் 22 பேர் அங்குள்ள ஒரு குகைக்குள் ஒதுங்கினர். அப்போது மலையில் இருந்து உருண்டுவந்த பாறை ஒன்று குகையின் மீது விழுந்தது.

12 பேர் பலி
இதில் அந்த குகை இடிந்தது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. இவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

36 பேர் பலி
ஒடிசாவின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டிட்லி புயலால் ஒடிசாவில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் கட்டாக், பூரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடும் பாதிப்பு
சில மாவட்டங்களில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications