மாநிலப் பிரிவினை கோரும் பர்லா-மத்திய அமைச்சராகியது ஏன்.. மே.வங்கம் பிரிக்கப்படுமோ? மமதா கட்சி பீதி!
கொல்கத்தா: வடக்கு மேற்கு வங்கத்தை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று இடைவிடாமல் வலியுறுத்தி வரும் ஜான் பர்லாவை பா.ஜ.க. மத்திய அமைச்சராக்கி உள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை 2 ஆக பிரித்து வடக்கு மேற்கு வங்க பகுதிகளை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்பது அம்மாநில பாஜக தலைவர்களின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கை படுதீவிரமாக வலியுறுத்தி வருபவர் பா.ஜ.க. எம்.பி. ஜான் பர்லா.
வடக்கு மேற்கு வங்க பகுதிகளை தனி யூனியன் பிரதேசமாக்கவே கூடாது என்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதேநேரத்தில் பாஜக தலைமையோ, மேற்கு வங்க மாநிலத்தை 2 ஆக பிரிக்காது மத்திய அரசு என்றும் கூறி வருகின்றனர்.

மாநில பிரிவினை
பாஜக தலைமையே இப்படி சொன்னாலும் ஜான் பர்லா, தனி மாநில கோரிக்கைகாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் வடக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜான் பர்லா, நிஷித் பிரமானிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜான் பர்லா தொடர்பான மத்திய அரசின் குறிப்பில் வடக்கு மேற்கு வங்கம், அஸ்ஸாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகிறவர் என்கிற குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

திரிணாமுல் எதிர்ப்பு
இதனால் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொந்தளிப்பை காட்டி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் செளகத் ராய் கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்கிற பிரிவினைவாதிதான் ஜான் பர்லா. கடந்த 2 ஆண்டுகாலமாக இதனையே பேசி வருபவர் ஜான் பர்லா. இப்போது அவரது கோரிக்கையை அங்கீகரிப்பது போல மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது பாஜக? என்கிறார்.

பாஜக விளக்கம்
மேலும் மேற்கு வங்கத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற பிரிவினைவாத முழக்கங்களுக்கு வலுசேர்க்கப் போகிறது பாஜகவின் இந்த நடவடிக்கை. இது தொடர்பாக பா.ஜ.க. விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறார் செளகத் ராய். ஆனால் மாநில் பாஜகவோ இதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

பிரிவினைக்கு ஆதரவு இல்லை
மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தை பிரிக்க ஆதரிக்க மாட்டோம். மக்களுக்கு சேவையாற்றுவார் என்கிற அடிப்படையில்தான் ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது என விளக்கம் தந்திருக்கிறார்.

ஜான் பர்லா மழுப்பல்
அதேநேரத்தில் இன்று மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்ற பின்னர் பெங்காலி செய்தி சேனல்களுக்கு ஜான் பர்லா பேட்டியளித்தார். அப்போது, மாநில பிரிவினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜான் பர்லா, இந்த கேள்விக்கு இப்போது பதில் அளிக்க முடியாது; வடக்கு மேற்கு வங்க மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்று பட்டும்படாமலும் கூறினார். இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.

கொங்குநாடு சர்ச்சை
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவரைப் பற்றிய குறிப்பில், கொங்குநாடு என மத்திய பா.ஜ.க. அரசு குறிப்பிட்டது. இதனால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை இணைத்து கொங்குநாடு தனி மாநிலத்தை பா.ஜ.க. உருவாக்க போகிறதா? என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் அனல் பறந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications