சி.பி.எம். தலைவர் கவுதமின் நாக்கை அறுப்பேன், எலும்பை உடைப்பேன்: மமதா கட்சி எம்.பி. மிரட்டல்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதாவை பற்றி தவறாக பேசினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கவுதம் தேபின் நாக்கை அறுத்து, எலும்பை உடைப்பேன் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. இத்ரிஸ் அலி மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. இத்ரிஸ் அலி வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டத்தில் உள்ள தாத்பூர் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நேர்மையின் உருவமாக இருப்பவர் முதல்வர் மமதா பானர்ஜி. அப்படி இருக்கையில் சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் மமதா சிறைக்கு செல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கவுதம் தேப் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு முறை அவர் மமதாவை பற்றி தவறாக பேசினால் அவரின் நாக்கை அறுப்பதுடன், எலும்பை உடைப்பேன். அவர் அலிமுத்தீன் தெருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்திருந்தாலும் விட மாட்டேன் என்றார்.
அலியின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்து, இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அலியிடம் கட்சி விளக்கம் கேட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறியதும் இதே இத்ரிஸ் அலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.