மும்பையில் பயங்கரம்.. தர்மபுரியைச் சேர்ந்தவர் கடத்திக் கொலை: 20 இடங்களில் கத்திக்குத்து
மும்பை: மும்பையில் தமிழர் ஒருவர் 20 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வில்லேபார்லேயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் குடிசைப்பகுதி நேரு நகர். அங்குள்ள சராசராம் தெருவில் வசித்து வரும் ராமன் என்பவரின் மகன் மாரியப்பன்(எ) மாரி(38). தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டைச் சேர்ந்த மாரிக்கும், உமா மகேஷ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
மாரி தனது குடும்பத்துடன் சனிக்கிழமை மாலை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது செல்போனில் யாரோ அவரை அழைத்துள்ளனர். எடுத்து பேசிய அவர் வெளியே சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாலை 5.30 மணிக்கு நேரு நகரில் உள்ள பள்ளி அருகே கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் மாரியின் உடலை கீழே தள்ளிவிட்டு சென்றார்கள். மாரியின் உடலில் 20 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் கூறுகையில்,
மாரி மீது ஜுஹு காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. முதல் கட்ட விசாரணையில் மாரி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. என்றார்.