இன்னும் பணத்தைக் காட்டலயே- கர்நாடகா தேர்தல் களத்தில் புலம்பும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள்
கர்நாடகா தேர்தல் களத்தில் தமிழக பாஜக தலைவர்கள் புலம்புகின்றனர்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. தமிழக பா.ஜ.க நிர்வாகிகளின் தேர்தல் பிரசாரத்தால் அமித் ஷா உற்சாகத்தில் இருக்கிறார். தேர்தல் செலவுக்குத்தான் பணம் தர மறுக்கிறார்கள் ' என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.
கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அங்குள்ள இந்து வாக்கு வங்கியை குறிவைத்து பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா.

பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்தில் குதிக்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து முக்கிய நிர்வாகிகளைத் தேர்தல் பணிக்கு அழைத்திருக்கிறார் அமித் ஷா.
கர்நாடகாவில் தமிழர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இவர்கள் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர். மாநில நிர்வாகிகளான நரேந்திரன், வானதி சீனிவாசன், கல்யாணசுந்தரம் எனப் பலரும் முகாமிட்டுள்ளனர். வரும் நாட்களில் இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர், " கர்நாடகாவில் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகை எண்ணிக்கையில் தமிழர்கள் சரிபாதி அளவுக்கு உள்ளனர். எங்களுக்கு அறுபது தொகுதிகளை தலைமை ஒதுக்கியுள்ளது. இந்து வாக்கு வங்கியை குறிவைத்து வீடு வீடாகப் பிரசாரம் செய்து வருகிறோம்.
மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட பிரசாரத்தை அகில இந்திய நிர்வாகிகள் வரவேற்றனர். எங்களது பிரசார வேகத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகளால் ஈடுகட்ட முடியவில்லை. எங்களுக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றவர், " இன்னும் சில சீனியர் நிர்வாகிகள் கர்நாடக பிரசாரக் களத்துக்கு வரவில்லை. பிரசாரத்தின் இறுதிநாட்களில் பங்கெடுக்கலாம் என்ற மனநிலையில் உள்ளனர். ஒரே ஒரு குறை என்னவென்றால், தேர்தல் பிரசாரச் செலவுகளுக்கு வேட்பாளரோ கட்சியோ இன்னும் பணம் தரவில்லை. ' பிரசார செலவுகளை அந்தந்த எம்.எல்.ஏக்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்' எனக் கட்சி கூறிவிட்டது. ஆனால், இதுநாள் வரையில் சொந்தக் காசைப் போட்டுத்தான் செலவு செய்து வருகிறோம். விரைவில் நிலைமை மாறும் என நம்புகிறோம்" என்றார்.
"கர்நாடகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக நிர்வாகிகள் பலரும் வசதியுள்ளவர்கள். அதனால்தான் அவர்களது செலவுகளை ஒரு பிரச்னையாக தலைமை பார்க்கவில்லை. இதை உணர்ந்துதான் முக்கிய நிர்வாகிகள் பலரும், கர்நாடகாவில் தலைகாட்டத் தயங்குகின்றனர். பிரதமர், உ.பி முதல்வர் வரும்போது, அங்கு அறுபதுக்கும் மேற்பட்ட பிரசாரப் பேரணிகள் நடக்க இருக்கின்றன. இந்தப் பேரணிகளில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இவர்களின் தயக்கம் குறித்தும் அகில இந்தியத் தலைமைக்குப் புகார்கள் பறந்து கொண்டிருக்கின்றன" என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர்.












Click it and Unblock the Notifications