சோனியாவுடன் ப.சிதம்பரம், தங்கபாலு உட்பட 12 பேர் சந்திப்பு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது சரமாரி புகார்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட 12 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட போது இனி காங்கிரஸில் கோஷ்டி பூசலே இருக்காது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் 12க்கும் மேற்பட்ட கோஷ்டிகள் காங்கிரஸில் விஸ்வரூபமெடுத்துள்ளன.
இந்த 12 கோஷ்டி தலைவர்களில் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தங்கபாலு, டாக்டர் செல்லக் குமார் ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் இக்குழுவினர் இன்று சந்தித்து இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று சோனியாவிடம் வலியுறுத்தினோம். இளங்கோவன், காங்கிரஸ் தலைவர்களை அரவணைத்துச் செல்வதில்லை. தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும் சோனியாவுடன் ஆலோசித்தோம் என்றார்.