காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... தமிழக அரசு முடிவு?
மார்ச் 29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
டெல்லி : உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மார்ச் 29க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களான கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்டவை எந்த அளவிற்கு நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு ஏற்கனவே இருந்த 192 டிஎம்சி காவிரி நீர் 177 டிஎம்சியாக குறைக்கப்பட்டது.

காவிரி நீரின் அளவு குறைந்தாலும் நீர் பங்கீட்டை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநிலத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை என்று கூறி தண்ணீர் தராமல் ஏமாற்றும் கர்நாடகாவிடம் இருந்து மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தண்ணீரைப் பெறுவதில் பிரச்னை இருக்காது என்று தமிழக அரசியல்வாதிகளும், விவசாயிகளும் நம்பினர்.
ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒரு அமைப்பு மட்டுமே அமைக்கப்படும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ம் தேதிக்குள் முடிகிறது.
இதனால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து கலந்து ஆலோசிப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் இவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்படி சுப்ரீம்கோர்ட் உத்தரவுபடி மார்ச் 29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசுக்கு மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே அறிவுறுத்தியுள்ளார். இதனால் தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications