சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தமிழக விவசாயி மயங்கி விழுந்தார்... டெல்லி போராட்டத்தில் பரபரப்பு
டெல்லிப் போராட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த விவசாயி திடீரென மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: போராட்டத்தின் 16 நாளான இன்று விவசாயி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். அவர் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் போராட்டக் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உண்ணாவிரதம்
இந்நிலையில், இன்று விவசாயி ஒருவர் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து போராட்டத்தைத் தொடங்கினார். வயதான அவர் உண்ணாமல் போராட்டக் களத்தில் சட்டை இல்லாமல் கடும் வெயிலில் படுத்த நிலையில் கிடந்தார்.

மனைவி மரணம்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் கருகி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து இவர் டெல்லி உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.

திடீர் மயக்கம்
இந்நிலையில், நேற்றிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருந்த விவசாயி இன்று மிகவும் சோர்ந்தே காணப்பட்டார். வெயில் அதிகரிக்க அதிகரிக்க மேலும் பலவீனமான விவசாயி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில்…
விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பான மற்ற விவசாயிகள், அவரை அங்கிருந்து தூக்கிக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலாவது பிரதமர் மோடி இதில் தலையிட்டு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications