23வது நாளாக தொடரும் விவசாயிகள் வேதனை.. டெல்லியில் முக்காடு போட்டு தரையில் உருண்டு போராட்டம்!
டெல்லியில் 23வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தலையில் முக்காடு போட்டும் கை கால்களை கட்டிக் கொண்டு தரையில் உருண்டு பெரண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லியில் 23ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதற்கும் பதில் சொல்லாத பாஜக அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 23 நாட்களாக நடுரோட்டில் வெயிலில் அமர்ந்து தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரை மொட்டை
ஆட்சியாளர்களை கவரும் வகையில் நூதனப் போராட்டங்களை ஒவ்வொரு நாளும் நடத்தி வரும் விவசாயிகள் தலை முடியை பாதியாக வழித்து ‘அடை மொட்டை' போராட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள்.
பாதி மீசை
என்ன செய்தும், மத்திய அரசு தங்களை கண்டு கொள்ளாததால் நேற்று விவசாயிகள் அரை மீசையை வழித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் தங்களை சந்திக்க வேண்டும் என்று அப்போது விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தலை கீழாய்…
அதே போன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் நேற்று தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. என்றாலும் ஆளும் பாஜக அரசின் ஓரக் கண் கூட விவசாயிகளின் மேல் படவில்லை.
முக்காடு போட்டு
இந்நிலையில், 23வது நாளான இன்று விவசாயிகள் அனைவரும் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது கூறிய போராட்டத் தலைவர் அய்யாகண்ணு " எங்களை இந்த அரசு முக்காடு போட வைத்துவிட்டது. நாங்களும் எத்தனையோ வகையில் போராட்டம் நடத்தினோம். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் முக்காடு போட்டு போராட்டம் நடத்துகிறோம்" என்று கூறினார்.
மோடிக்கு புத்தி கொடு
முக்காடு போராட்டத்தின் ஊடாகவே, கை கால்களை கயிறால் கட்டி தரையில் உருண்டு நூதனப் போராட்டத்தில் இன்று தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர். கடவுளே மோடிக்கு புத்தியைக் கொடு என்று கேட்டுதான் அங்கபிரதட்சனம் செய்து போராடி வருகிறோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.