போராட்டம் நடத்திய விவசாயிகளின் கூடாரங்களை அகற்ற போலீசார் மிரட்டல்… டெல்லி பரபரப்பு
டெல்லியில் 37 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் உடனடியாக அங்கிருந்து கூடாரங்களை அகற்ற வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தினர்.
சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 37 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

நூதனப் போராட்டம்
எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து நடத்தி வந்தனர்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், நேற்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விவசாயிகள் தலைவர் அய்யாகண்ணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அய்யாகண்ணு அறிவித்தார்.

போலீசார் மிரட்டல்
இந்நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் போடப்பட்டுள்ள கூடாரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தமிழக விவசாயிகளின் உடமைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ரிசர்வ் படை
விவசாயிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக ஜந்தர் மந்தர் பகுதியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அடுத்தது என்ன செய்வது என்று யோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications