காவிரி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்- கூடுதல் நீர் ஒதுக்க கோரிக்கை!
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு 4,000 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது.
டெல்லி: காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு 4,000 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தமிழகத்துக்கு கூடுதல் நீர் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் மீதான அனைத்து விசாரணைகளும் கடந்த மாதம் நிறைவடைந்தது. ஜூலை 11-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.
காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
இதனையடுத்து காவிரி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அனைத்து தரப்பும் எழுத்துப் பூர்வமான வாதங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
4,000 பக்க வாதம் தாக்கல்
இதனடிப்படையில் தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் 4,000 பக்கங்களைக் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. மொத்தம் 5 வால்யூம்களாக இது தாக்கல் செய்யப்பட்டது.
நிலத்தடி நீர் விவகாரம்
இந்த இறுதி எழுத்துப்பூர்வமான வாதத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை ஒருபோதும் கணக்கில் கொள்ளக் கூடாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது 197 டி.எம்.சி. நீர்.
கூடுதல் நீர் ஒதுக்கீடு
ஆனால் இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது. ஆகையால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 72 டி.எம்.சி. நீரை ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.