டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜெயக்குமார் - எதிர்ப்பால் வெளியேறினார்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லி: ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு வெள்ளிக்கிழமை தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து அமைச்சர் ஜெயக்குமாரை வெளியேறுமாறு முழக்கம் எழுப்பினர்.
கடந்த 18 நாட்களாக, தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி மசோதா குறித்த மாநில அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி வந்த அமைச்சர் ஜெயக்குமார், விவசாயிகளின் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக விவசாயிகளின் கோரிக்கை நியாமானது. இதை நிறைவேற்றுவது மத்திய அரசின் கைகளில் உள்ளது. இதை தமிழகத்திற்கு மட்டும் என்றில்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் விவசாயிகளுக்காக என்பது போல் அவர்களின் வங்கிக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும். இதன் மீது நமது அரசு தொடர்ந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நாங்கள் பயிர் காப்பீடுக்காக தமிழக அரசின் பங்கு மானியம் கட்டப்பட்டு விட்டது. இதை நான் சட்டசபையிலும் கூறியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

விவசாயிகள் கொதிப்பு
அப்போது விவசாயிகள் சிலர் ஜெயக்குமாரிடம் எழுந்து கேள்வி எழுப்பினர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுபவர்களை தமிழக போலீசார் கைது செய்கின்றனர். தமிழகத்தில் ஆதரவாளர்களை கைது செய்யும் அரசு டெல்லியில் மட்டும் ஆதரவு அளிப்பது ஏன் என்று கேட்டனர்.

வெளியேறிய அமைச்சர் ஜெயக்குமார்.
அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக திடீரென விவசாயிகள் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் அமைச்சர் ஜெயக்குமார் வெளியேறினார். மேலும் விவசாயிகள் பி்ரச்சனையில் தமிழக அரசு வேஷம் போடுவதாக குற்றச்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications