இதயமாக உள்ள இரட்டை இலையை முடக்க சொல்வதா?... தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்
அதிமுகவின் இதயமாக உள்ள இரட்டை இலையை முடக்கச் சொல்வதா என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டெல்லி : திமுகவுடன் கைகோர்த்து தினகரன் அதிமுகவை அழிக்க நினைப்பதாகவும், கட்சியின் இதயமாக உள்ள இரட்டை இலையை முடக்க சொல்வதா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் நடைபெறுகிறது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

எப்படியாவது இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட வேண்டும் என்று தினகரன் தரப்பு உறுதியாக இருக்கின்றனர். அவர்கள் தரப்பு வழக்கறிஞரே சின்னத்தை முடக்குங்கள் என்று தான் வாதாடுகிறார்.
இதை எந்தத் தொண்டனும் ஏற்க மாட்டான். எம்ஜிஆர் கொண்டு வந்த இரட்டை இலை சின்னம் எங்கள் கட்சியினரின் உயிர் மூச்சு அதிமுகவினர் அனைவரும் தினகரனின் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனர். நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் எதுவும் போலி ஆவணங்கள் இல்லை, தினகரன் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் தான் போலியானவை. நாங்கள் உண்மையான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம், நிச்சயம் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்றார்.
ஆயிரம் தினகரன் வந்தாலும், திமுக போன்ற எத்தனை கட்சிகள் எதிர்த்தாலும் கட்சியையும் சின்னத்தையும் எங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. தர்மம் எங்கள் பக்கம் உள்ளது நிச்சயம் தர்மம் வெல்லும்.
உள்நோக்கத்துடனே எனக்கு எதிராக காசிமேடு துறைமுகத்தில் போராட்டம் தூண்டிவிடப்படுகிறது. மீனவர்களிடம் மாமூல் வசூலித்ததை தடை செய்துவிட்டோம், இதனால் ஆத்திரமடைந்தவர்கள் திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சீன என்ஜின்கள் பயன்படுத்தப்பட்ட படகுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications