கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தினோம்.. பிரதமரை சந்தித்த பின்னர் விஜயகாந்த்
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சிக் குழு வலியுறுத்தியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, த.மா.காவின் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் இன்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது மேகதாது அணை விவகாரம் உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை, 20 தமிழர்கள் படுகொலை, நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து எங்களது கோரிக்கைகளை முன் வைத்தோம். இதுதொடர்பாக மனு அளித்தோம்.
அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார். பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது.
ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழர்கள் பலியானார்கள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் ஆந்திர அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றோம். இதுதொடர்பாக பேசுகிறேன் என்றார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். நிலங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தாது. அரசுதான் கையகப்படுத்தும். அரசு மருத்துவமனைகள், ரயில் பாதைகள் அமைக்க பயன்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார். மீனவர் பிரச்சனை விரைவில் சுமூகமாக முடியும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications