தமிழகத்தில் அரசியலுக்காக எதிர்ப்பு - என்ன விலை கொடுத்தேனும் மேகதாதுவில் அணை-: இது சித்தராமையா சபதம்!
பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் என்ன விலை கொடுத்தேனும் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூருவில் பீனியா-நாகசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எனது தலைமையில் கர்நாடக அனைத்துக்கட்சி குழுவினர் மேகதாது அணைவிவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினோம். இந்த குழுவில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
மேகதாது அணை குடிநீர் தேவைக்காகவும் மின்சார உற்பத்திக்காகவும் கட்டப்படுகிறது. இந்த அணை கட்டப்பட்டால் மழை காலத்தில் கடலில் சென்று வீணாகும் தண்ணீரில் 30 முதல் 35 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும். அந்த தண்ணீரை பயன்படுத்தி பெங்களூரு நகரம், புறநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
தமிழக அரசியல்வாதிகள் தேவையில்லாமல் மேகதாது அணைவிவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி காவிரி பாயும் மாநிலங்களுக்கு உரிய பங்கை கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடகம் வழங்கி வருகிறது. எந்த காரணம் கொண்டும் மேகதாது அணை திட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று பிரதமரிடம் எடுத்து கூறி இருக்கிறோம்.
அதோடு பிரதமரின் ஒத்துழைப்பையும் கோரி இருக்கிறோம். மேகதாது அணை திட்டத்தை என்ன விலை கொடுத்தாவது செயல்படுத்தியே தீருவோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கர்நாடகத்தில் பள்ளிகளில் கன்னட மொழி வழி பாடத்திட்டம் குறித்தும் பிரதமரிடம் பேசினோம். தாய்மொழி கல்வி திட்டம் குறித்து முடிவு செய்ய முதல்வர்கள் மாநாட்டை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்.
இது கர்நாடகம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது நாடு முழுவதுக்கும் உள்ள பிரச்சினை. இதற்காக நாங்கள் சட்டதிருத்தம் கொண்டு வருவோம். அதோடு ஒத்த கருத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு முதல்வர் சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications