மத்திய பிரதேசத்தில் பயங்கரம்.. தமிழக லாரி டிரைவர் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை
உஜ்ஜையினி: மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழக லாரி டிரைவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு டிரைவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மற்றொரு டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான டிரைவரின் பெயர் சுப்ரமணி என்பதாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவராவார். மத்திய பிரதேச மாநிலம் பட்நகரில் இருந்து லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரைவர் சுப்ரமணி மற்றொரு ஓட்டுனர் ராஜேஷ் உடன் தமிழகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது லாரியை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உஜ்ஜையினி அருகே டோல்கேட்டில் நின்ற போது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் டிரைவர் சுப்ரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனிருந்த டிரைவர் ராஜேஷ் படுகாயமடைந்தார். டோல்கேட்டில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் காயமடைந்த டிரைவர் ராஜேஷை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
டோல் கேட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் எதற்காக லாரி டிரைவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் டிரைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் தர்மபுரியை சேர்ந்த ஒரு லாரி டிரைவர், மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications