பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை- தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்!!
பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் என்ற பெயரிலான கும்பல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை தேடித் தேடி தீ வைத்து எரித்ததால் தமிழக லாரி ஓட்டுநர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதிலும் திருத்தம் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இளைஞர் தாக்குதலுக்கு பதிலடி
இதனிடையே கர்நாடகாவில் தமிழக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடகா பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் தாக்குதல்
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நஞ்சன்கூடு பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைக் கண்டித்து கக்கநல்லாவில் சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

கடைகள் நாசம்
பெங்களூரு செயிண்ட்ஜார்ஜ் பகுதி மற்றும் ராம்நகரில் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் தாக்கப்பட்டன. அதேபோல் மாண்டியாவில் தமிழருக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

லாரிகளுக்கு தீ வைப்பு
பெங்களூரு புறநகர் பகுதியில் மைசூர் சாலையில் தமிழக பதிவெண் கொண்ட 2 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல் மேலும் 3 லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் மைசூர் சாமுண்டி மலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்றுக்கும் கன்னட அமைப்பினர் தீ வைத்தனர். இதில் அந்த கார் எரிந்து நாசமானது.

அச்சம்
இதனால் கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மொத்தம் 12 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 12 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவில் உள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் உயிரைக் கையில்பிடித்தபடி பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

மொத்தம் 35 லாரிகள்
இன்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகாவின் பல பகுதிகளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பெங்களூர் நியூ டிம்பர் லே-அவுட்டில் நிறுத்தப்பட்டிருந்த 25 லாரிகளுக்கு ஒட்டுமொத்த மொத்தமாக தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த லாரிகள் அனைத்தும் தமிழக பதிவெண் கொண்டவை. சரக்கு ஏற்றுவதற்காக வந்த லாரிகள் மொத்தமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விஷமிகள் தீ வைத்து எரித்ததால் லாரிகளின் டயர்கள் வெடித்து சிதறும் சத்தம் வெடிகுண்டு வெடித்ததை போல கேட்டது. பெங்களூரில் இன்று மட்டும் மொத்தமாக சுமார் 35 லாரிகள் எரிக்கப்பட்டும் போலீசாரால் தடுக்க முடியவில்லை












Click it and Unblock the Notifications