தமிழ்நாட்டுக்கு மேலும் 2 மத்திய அமைச்சர்கள் பதவி?
டெல்லி: தமிழகத்துக்கு மேலும் 2 மத்திய அமைச்சர்கள் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்ற 45 புதிய அமைச்சர்களின் இலாகா விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக சிறிய அமைச்சரவை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில அமைச்சர்களுக்கு பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்று மூத்த காபினெட் அமைச்சர்களுக்கு தலா 2 பெரிய இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த 3 அமைச்சர்களுக்கும் கூடுதல் சுமையாக கருதப்படுகிறது.

அருண் ஜேட்லி, ரவிசங்கரிடம் கூடுதல்
அதாவது நிதி அமைச்சர் அருண்ஜேட்லியிடம் கூடுதல் சுமையாக பாதுகாப்புத் துறை உள்ளது. தொலை தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் சட்டத்துறை கூடுதாக உள்ளது.

ஜவ்தேகரிடம் சுற்றுச் சூழல் கூடுதல்
தகவல் - ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகரிடம் சுற்றுச்சூழல் கூடுதல் சுமையாக உள்ளது. பாதுகாப்பு, சட்டம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று துறைகளும் மிகவும் முக்கியமான துறைகளாகும்.

அமைச்சரவை விரிவாக்கம்
எனவே இந்த துறைகளுக்கு யார் - யாரை நியமனம் செய்வது என்று பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். எனவே விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி விட்டது.

புதிய அமைச்சர்கள் நியமனம்
ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு இந்த 3 முக்கிய இலாகாக்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு இன்னும் 2 வாரங்களில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்துக்கு 2?
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது தமிழ் நாட்டுக்கு மேலும் 2 அமைச்சர்கள் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதில் அன்புமணி ஒருவராக இருப்பார். மற்றொருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்ததலைவர்களில் ஒருவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்காக?
தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications