மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு ஒரு பாதிப்பும் இல்லை: கர்நாடக முதல்வர்
டெல்லி: மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில் எந்த பாதிப்பும் இருக்காது என்று கார்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட துடிக்கிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் 10 அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று டெல்லி சென்று மோடியை சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர்.
மோடியை சந்தித்த பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து பிரதமரை சந்தித்தோம். எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கள் பகுதியில் தான் அணை கட்ட உள்ளோம். இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
தமிழகத்திற்கு தேவையான 192 டிஎம்சி நீரை அளித்த பிறகு உள்ள நீரை மட்டுமே மேகதாதுவில் தேக்கி பயன்படுத்தப்படும். நாங்கள் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications